மகுடஞ்சாவடியில் கன்டெய்னர் லாரி மோதி டிரைவர் பலி - பார்சல் கம்பெனியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்

மகுடஞ்சாவடியில் கன்டெய்னர் லாரி மோதி டிரைவர் பலியானார். இதனால் பார்சல் கம்பெனியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
மகுடஞ்சாவடியில் கன்டெய்னர் லாரி மோதி டிரைவர் பலி - பார்சல் கம்பெனியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
Published on

இளம்பிள்ளை,

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை அடுத்த வைகுந்தம் ஆலம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 55). இவர் மகுடஞ்சாவடியில் உள்ள ஸ்டேட் பார்சல் கம்பெனியில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நேற்று பார்சல் கம்பெனியில் வெளியூர்களுக்கு பார்சல்களை அனுப்பவதற்காக கன்டெய்னர் லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இதில் ஒரு கன்டெய்னர் லாரியின் பின்னால் வெங்கடாசலம் நின்றிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த கன்டெய்னர் லாரியை அதன் டிரைவர் பின்நோக்கி இயக்கி உள்ளார். இதில் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே வெங்கடாசலம் பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் கம்பெனி வளாகத்தில் இருந்த அவரது உடலை, வெளியே ஒரு மரத்துக்கு அடியில் கொண்டு வந்து போட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த வெங்கடாசலத்தின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர், பார்சல் கம்பெனியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்ததும் மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிக்குமார், தாசில்தார் பாலாஜி மற்றும் போலீசார் விரைந்து வந்து, முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும் கம்பெனி நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

இந்த சம்பவம் தொடர்பாக மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com