மயிலாப்பூரில் சமையல் தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை - நண்பர் கைது

சென்னை மயிலாப்பூரில் குடிபோதையில் சமையல் தொழிலாளியை கழுத்தை அறுத்து படுகொலை செய்த நண்பர் கைது செய்யப்பட்டார்.
மயிலாப்பூரில் சமையல் தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை - நண்பர் கைது
Published on

சென்னை,

சென்னை மயிலாப்பூர் பல்லக்கு மாநகரைச் சேர்ந்தவர் மோகன் (வயது 50). திருமணம் ஆகாத அவர், சமையல் வேலை செய்து வந்தார். போதைக்கு அடிமையான இவர், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (26) என்பவர் அங்கு வந்தார். லோகேசும், மோகனும் சேர்ந்து மது அருந்தினார் கள்.

போதை அதிகமாகி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். லோகேஷ் தனது மனைவியை பிரிந்து வாழ்வதாக தெரிகிறது. சண்டையின்போது மோகன், லோகேசின் மனைவி குறித்து தப்பாக பேசியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த லோகேஷ், மோகனின் கழுத்து, கால் ஆகிய பகுதிகளில் சிறிய கத்தியால் சரமாரியாக அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த மோகன், அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார். ரத்தப்போக்கு அதிகமாகி அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்து போனார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும், மயிலாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் விரைந்து சென்று, மோகனின் உடலை கைப்பற்றி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தப்பி ஓடிய லோகேஷ் கைது செய்யப்பட்டார். லோகேஷ் கூலி வேலை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com