மயிலாப்பூரில், குழந்தையை கடத்த வந்ததாக கருதி ஒருவர் மீது தாக்குதல்

மயிலாப்பூரில் நள்ளிரவில் சம்பவம் குழந்தையை கடத்த வந்ததாக கருதி ஒருவர் மீது தாக்குதல் போலீசார் மீட்டனர்.
மயிலாப்பூரில், குழந்தையை கடத்த வந்ததாக கருதி ஒருவர் மீது தாக்குதல்
Published on

அடையாறு,

மயிலாப்பூரில் குழந்தையை கடத்த வந்ததாக கருதி ஒருவரை பிடித்து பொதுமக்கள் தாக்கி கம்பத்தில் கட்டி வைத்தனர். போலீசார் அந்த நபரை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்ததால் அவரை விடுவித்தனர்.

மயிலாப்பூர் காமதேனு அருகே உள்ள நடைபாதையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 குடும்பத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தையுடன் படுத்து தூங்கினர். அப்போது லேசாக மழை பெய்தது.

நள்ளிரவில் ஒரு நபர் போர்வையை போர்த்தியபடி அங்கு வந்து படுத்துள்ளார். இதனை கண்ட ஒரு பெண் இந்த நபர் குழந்தையை கடத்த வந்ததாக கருதி கூச்சலிட்டார்.

இதனால் அப்பகுதியில் இருந்த மற்றவர்கள், வாகன ஓட்டிகள் என பொதுமக்கள் திரண்டு அந்த நபரை பிடித்து அடித்து ஒரு கம்பத்தில் கட்டி வைத்து போலீசுக்கு தகவல் அளித்தனர்.

அங்கு விரைந்த மயிலாப்பூர் போலீசார் அந்த நபரை மீட்டு போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், குறிப்பிட்ட எந்த இடத்திலும் இல்லாமல் சுற்றிக் கொண்டு இருப்பதும் தெரியவந்தது, மேலும் அந்த நபரால் தனது பெயரைக் கூட சொல்லத்தெரியவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசார் அந்த நபருக்கு உணவு வழங்கி, பின்னர் விடுவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com