மைசூரு அரண்மனையில் இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்தினார்

மைசூரு அரண்மனையில் இளரவசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்தினார்.
மைசூரு அரண்மனையில் இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்தினார்
Published on

மைசூரு,

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா நேற்றுமுன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இந்த தசரா விழாவை, சாமுண்டி மலையில் வைத்து முதல்-மந்திரி குமாரசாமி முன்னிலையில் இன்போசிஸ் அறக்கட்டளை தலைவியும், எழுத்தாளருமான சுதா மூர்த்தி சாமுண்டீஸ்வரி அம்மன் சிலைக்கு மலர் தூவியதன் மூலம் தொடங்கி வைத்தார்.தசரா விழாவுடன், மலர்க்கண்காட்சி உள்பட ஏராளமான விழாக்களும் தொடங்கின.

மைசூரு தசரா விழாவையொட்டி அரண்மனையில் நவராத்திரி விழாக்களும் தொடங்கின. அதிகாலையில் அரண்மனையில் கணபதி ஹோமம் உள்பட ஏராளமான பூஜைகள் நடைபெற்றன.

அதன்பின்னர் காலை 10 மணி அளவில் இளவரசர் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார், தங்கம், வைரம், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனத்துக்கு சிறப்பு பூஜை செய்தார். அதன்பின்னர் அரண்மனை புரோகிதர்கள் யதுவீருக்கு பாத பூஜை செய்தனர். யதுவீரின் மனைவி திரிஷிகா குமாரியும் யதுவீர் காலில் மலர்களை தூவி பாத பூஜை செய்தார். அதன்பின்னர் இளவரசர் யதுவீர் ராஜ உடை அணிந்து அரண்மனை காவலர்கள் பாராட்டு கோஷங்கள் முழுங்க தர்பார் ஹாலுக்கு வந்தார்.

பின்னர் அவர், சிம்மாசனத்தில் அமர்ந்தார். அப்போது அவருக்கு அரண்மனை காவலர்கள், தர்பார் ஹாலில் இருந்தவர்கள் மரியாதை சலுத்தினர். அவர்களின் மரியாதையை ஏற்றுக் கொண்ட யதுவீர், சிம்மாசனத்தில் அமர்ந்து தனியார் தர்பார் நடத்தினார். சுமார் அரை மணி நேரம் அவர், சிம்மாசனத்தில் அமர்ந்து தர்பார் நடத்தினார்.

இதனை மகாராணி பிரமோதா தேவி, யதுவீரின் மனைவி திரிஷிகா குமாரி, யதுவீர்-திரிஷிகா குமாரி தம்பதியின் மகனும், குட்டி இளவரசருமான ஆத்யவீர் ஆகியோரும் கண்டு களித்தனர். இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். 19-ந்தேதி வரை யதுவீர் தினமும் தர்பார் நடத்துகிறார்.

தசரா விழாவையொட்டி அரண்மனை வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகள், அலங்கரிக்கப்பட்டன. பின்னர் அந்த யானைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com