ஓட்டேரியில்,ஆக்கிரமித்து கட்டப்பட்ட 19 வீடுகள் இடித்து அகற்றம்

ஓட்டேரியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 19 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.
ஓட்டேரியில்,ஆக்கிரமித்து கட்டப்பட்ட 19 வீடுகள் இடித்து அகற்றம்
Published on

திரு.வி.க.நகர்,

சென்னை ஓட்டேரி கொன்னுர் நெடுஞ்சாலையில் அயனாவரம் சிக்னல் அருகே சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் கடந்த 50 வருடங்களாக 21 பேர் வீடுகளை கட்டி ஆக்கிரமித்து வந்தனர். அதில் சுமார் 60 குடும்பத்தினர் வசித்து வந்தனர்.

மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தின் அளவை குறிப்பிட்டு கொடுக்கும்படி திரு.வி.க.நகர் மண்டல (மண்டலம் 6) அதிகாரி அருணா மற்றும் செயற்பொறியாளர் செந்தில்நாதன் ஆகியோர் அயனாவரம் தாசில்தார் மஞ்சுநாதனை கேட்டுக்கொண்டனர்.

அதன்படி தாசில்தார் தலைமையிலான குழு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அந்த 21 வீடுகளும் மாநகராட்சிக்கு உட்பட்ட எல்லைக்குள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து வீடுகளை காலி செய்யும்படி மேற்கண்ட 21 வீட்டின் உரிமையாளர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினார்கள். ஆனால் வீடுகளை காலி செய்ய முடியாது என அங்கு வசித்து வந்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் செயற்பொறியாளர் செந்தில்நாதன் முன்னிலையில் உதவி பொறியாளர்கள் சரஸ்வதி, பொன்னுரங்கம், கோபிநாத் மற்றும் சரவணன் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த இடத்திற்கு சென்றனர்.

பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் அங்கு இருந்த வீடுகளை அதிரடியாக இடித்து அகற்றினார்கள். மொத்தம் 19 வீடுகள் அகற்றப்பட்டது. 2 வீட்டின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த வீடுகளை இடிப்பதற்கு கால அவகாசம் வழங்கினார்கள்.

மேலும் அங்கு இருந்த ஒரு டாஸ்மாக் கடை கட்டிடம் மற்றும் பழுதடைந்த நிலையில் இருந்த மாநகராட்சி கழிப்பறை ஒன்றும் இடித்து அகற்றப்பட்டது. முன்னதாக அந்த டாஸ்மாக் கடை அருகில் உள்ள வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த சுமார் ரூ.40 கோடி மதிப்புள்ள இடம் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com