பெரம்பூரில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்

சென்னை மாநகராட்சி குடிநீர் வாரியம் சார்பில், சிறிய அளவிலான அடிபம்பு அமைக்கப்பட்டு அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பெரம்பூரில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்
Published on

திரு.வி.க. நகர்,

சென்னை பெரம்பூர் வீனஸ் குருசாமி தெருவில் சென்னை மாநகராட்சி குடிநீர் வாரியம் சார்பில், சிறிய அளவிலான அடிபம்பு அமைக்கப்பட்டு அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குருசாமி தெரு, ஆண்டியப்பன் தெரு, ஜெயபீம் நகர், முகமது தெருவைச் சேர்ந்தவர்கள் இந்த அடிபம்பு மூலம் குடிநீரை பிடித்து பயன்படுத்தி வந்தனர்.

கடந்த சில நாட்களாக இந்த அடிபம்பில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் அதன்மீது மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

பொதுமக்கள் அவ்வப்போது சுத்தமான தண்ணீர் வருகிறதா? என அடிபம்பில் தண்ணீர் அடித்து பார்ப்பதும், செல்வதுமாக இருந்தனர். ஆனால் கழிவுநீர் கலந்து வந்ததால் தண்ணீரை பிடிக்காமல் அங்கேயே கொட்டி விட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் தண்ணீர் செல்ல வழியின்றி அடிபம்பை சுற்றிலும் தேங்கி நிற்கிறது. பல நாட்களாக கழிவுநீருடன் கலந்த குடிநீர் தேங்கி நிற்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், புழுக்களும் தண்ணீரில் மிதப்பதால் அந்த பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

இதன் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு உள்ளேயும் இந்த கழிவுநீர் புகுந்துவிட்டதால், கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்களும் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்றவும், குடிநீரில் கழிவுநீர் கலந்துவருவதை தடுக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com