பெருங்களத்தூரில் கன்டெய்னர் லாரி மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் சாவு

பெருங்களத்தூரில் கன்டெய்னர் லாரி மோதியதில் 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். அந்த லாரியை முந்திச்செல்ல முயன்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
பெருங்களத்தூரில் கன்டெய்னர் லாரி மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் சாவு
Published on

தாம்பரம்,

சென்னையை அடுத்த புதுபெருங்களத்தூர் விவேக் நகர் முதல் பிரதான சாலையை சேர்ந்தவர் தனசேகரன். இவரது மகன் சதீஷ் (வயது 19). பாலவாக்கம் மணிமேகலை நகரை சேர்ந்தவர் பார்த்திபன் (21). இருவரும், கவுரிவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.காம் படித்து வந்தனர்.

நேற்று மாலை இவர்கள் இருவரும், வண்டலூரில் உள்ள நண்பர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் அங்கிருந்து ஜி.எஸ்.டி. சாலை வழியாக திரும்பி வந்தனர். பெருங்களத்தூர் சிக்னல் அருகே வந்தபோது, முன்னால் சென்ற கன்டெய்னர் லாரியை முந்திச்செல்ல முயன்றனர்.

அப்போது லாரி எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அதில், படுகாயமடைந்த பார்த்திபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். படுகாயமடைந்த சதீஷ் குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அங்கு சதீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த குந்தன்சிங் (23) என்பவரை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com