பாளையங்கோட்டையில் வக்கீல்கள் சாலை மறியல்

பாளையங்கோட்டையில் காங்கிரஸ் வக்கீல்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பாளையங்கோட்டையில் வக்கீல்கள் சாலை மறியல்
Published on

நெல்லை,

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவதூறாக பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வக்கீல் அணியினர் நேற்று பாளையங்கோட்டையில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வக்கீல் அணி மாநில துணை தலைவர் ராமேசுவரன் தலைமையில் வக்கீல்கள் திரண்டு கோர்ட்டு முன்பு உள்ள திருச்செந்தூர்- தூத்துக்குடி சாலைக்கு வந்தனர். அங்கு அவர்கள் திடீர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது கோர்ட்டு வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாயகம் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து வக்கீல்கள் மறியலை கைவிட்டு, சாலையோரத்தில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மாநகர் மாவட்ட வக்கீல் அணி தலைவர் மணிகண்டன், காங்கிரஸ் கட்சி வக்கீல்கள் பொன்.ராஜேந்திரன், எஸ்.பி.வி.பால்ராஜ், பிரம்மா, மேத்தா மைதீன், மரியகுழந்தை, அப்துல் நிஜாம், அருண், பழனி, தமிழ்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com