பாளையங்கோட்டையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

பாளையங்கோட்டையில் பாலத்தை விரைவாக கட்டி முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பாளையங்கோட்டையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
Published on

நெல்லை,

பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரில் உள்ள கால்வாயின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக தோண்டப்பட்ட மண் கால்வாயின் குறுக்கே கொட்டப்பட்டு உள்ளது. மேலும் 2 மாதங்களாக எந்தவித பணியும் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அங்கு குளம் போல் தேங்கி உள்ள கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. நாய், பன்றிகள் அவ்வப்போது உள்ளே விழுந்து செத்து மிதக்கின்றன. இந்த நிலையில் நேற்றும் ஒரு பன்றி தண்ணீருக்குள் விழுந்து செத்துகிடந்தது.

இதைக்கண்டு அந்த பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக திரண்டு சமாதானபுரத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் மெயின் ரோட்டுக்கு வந்த னர். அங்கு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், மாநகராட்சி அதிகாரிகள் பாஸ்கரன், பைஜூ உள்ளிட்டோர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் உடனடியாக பாலப்பணியை முடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com