

வண்டலூர்,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அழிஞ்சிவாக்கம் சாய் கிருபா நகர் பகுதியை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகள் அனுப்பிரியா (வயது 21). இவர் சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி அருகே பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரியின் விடுதியில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரியில் தேர்வு எழுதி வந்த அவர் விடுதியில் இருந்தார். இதற்கிடையே நேற்று காலை திடீரென்று அனுப்பிரியா விடுதியின் 10-வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார்.
இதனை பார்த்த சக கல்லூரி மாணவிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த அனுப்பிரியாவை மாணவிகள் மீட்டு, அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்து விட்டு ஏற்கனவே அனுப்பிரியா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.