அரசு சார்பு நிறுவனங்களில் ரூ.189 கோடி நஷ்டம் நாராயணசாமி தகவல்

அரசு சார்பு நிறுவனங்களில் 2 ஆண்டுகளில் ரூ.189 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
அரசு சார்பு நிறுவனங்களில் ரூ.189 கோடி நஷ்டம் நாராயணசாமி தகவல்
Published on

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தில் அன்பழகன் எம்.எல்.ஏ. எழுப்பிய கேள்வியை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு.

அன்பழகன்: புதுவை அரசில் எந்தெந்த சார்பு நிறுவனங்கள் லாபகரமாக செயல்படுகின்றன? எந்தெந்த நிறுவனங்கள் நஷ்டத்தில் செயல்படுகின்றன? 2015-16, 2016-17 ஆகிய 2 ஆண்டுகளில் அரசுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் எவ்வளவு?

முதல்-அமைச்சர் நாராயணசாமி: புதுச்சேரி சாராய வடிசாலை குழுமம், மின் உற்பத்தி குழுமம் ஆகியவை லாபத்தில் இயங்குகின்றன. பாசிக், பாப்ஸ்கோ, பிப்டிக், பாட்கோ, மகளிர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுக்கழகம், பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழகம், புதுவை நெசவாலைக் கழகம், சுதேசி மற்றும் பாரதி பஞ்சாலை கழகம், சுற்றுலா வளர்ச்சி கழகம், சாலை போக்குவரத்து கழகம் ஆகியன நஷ்டத்தில் இயங்குகின்றன. இவற்றின் மூலம் 2015-16ல் ரூ.105.18 கோடியும், 2016-17ல் 84.13 கோடியும் என சுமார் ரூ.189 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அன்பழகன்: இந்த நஷ்டத்தை தடுத்து நிறுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

நாராயணசாமி: பட்ஜெட்டில் மிகப்பெரிய சுமையே சார்பு நிறுவனங்களுக்கு நிதி கொடுப்பதுதான். ஏறத்தாழ ரூ.765 கோடி இவற்றுக்கு கொடுக்கப்படுகிறது. இவற்றை புனரமைக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையிலான குழு ஆய்வு செய்து 4 நிறுவனங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

அன்பழகன்: பாப்ஸ்கோ நிறுவனத்தில் ரூ.37 கோடி பாக்கித்தொகை செலுத்தப்படாமல் உள்ளது. இந்த நிறுவனம் தொடர்பாக விசாரணை வைத்தீர்கள். அது என்னவானது?

அமைச்சர் கந்தசாமி: அந்த நிறுவனத்தில் எப்படி நஷ்டம் வந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.

டி.பி.ஆர்.செல்வம் (என்.ஆர்.காங்): அதை யார் எடுத்து சென்றார்கள்? தணிக்கை செய்தால் என்ன நடந்தது என்று தெரியப்போகிறது?

அமைச்சர் கந்தசாமி: நிர்வாக திறமையின்மையால்தான் நஷ்டம். கார்பரேசன்களில் பலர் வேலை செய்வதே கிடையாது. 40, 50 பார் இருந்தும் அனைத்தும் நஷ்டத்தில் இயங்குகிறது. பொருட்கள் சப்ளை செய்தவர்களுக்கு கூட பணம் தரவில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com