

காரைக்கால்,
காரைக்காலில் ஆண்டுதோறும் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) யின் வருடாந்திர கூட்டு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் கூட்டு பயிற்சி முகாம் 10 நாட்கள் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 400 என்.சி.சி மாணவர்களும், மாகியை சேர்ந்த கல்லூரி என்.சி.சி. மாணவர்கள் 50 பேர்களும் பங்கேற்று பயிற்சி பெறுகின்றனர்.
இந்த முகாம் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. காரைக்கால் மாவட்ட என்.சி.சி. அதிகாரியும், முகாம் அதிகாரியுமான கர்னல் சி.எஸ்.சர்மா பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசினார்.
அவர் பேசும்போது நாட்டை பாதுகாப்பதில் ராணுவம் எப்படி செயல்படுகிறது? என்பது குறித்தும், ஒரு இந்திய குடிமகனாக நாட்டை பாதுகாப்பதில் மாணவர் களுக்கு உள்ள பங்கு குறித்தும் விளக்கினார். மேலும் மாணவர்கள் ஒழுக்கம் மிக்கவர்களாகவும், துணிச்சல் மிகுந்தவர் களாகவும், நாட்டுக்கு ஒரு ஆபத்து என்றால் எப்படி தீரமுடன் போராட வேண்டும்? என்றும் விளக்கி பேசினார்.
முன்னதாக துணை முகாம் அதிகாரி மேஜர் ரெங்கையன் வரவேற்றார்.
துப்பாக்கி சுடும் பயிற்சி
இந்த முகாமில் பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த என்.சி.சி. அதிகாரிகளும், நிரந்தர ராணுவ பயிற்றுனர்களும் கலந்து கொண்டு என்.சி.சி. மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி, அணிவகுப்பு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளிக்கின்றனர். முகாமின்போது ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, தூய்மைப்பணி உள்ளிட்ட பல்வேறு சமுதாயப் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.