புனேயில் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்ட பெண் மாயம் உறவினர்கள் போராட்டம்

புனேயில் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்ட பெண் மாயமானதால் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புனேயில் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்ட பெண் மாயம் உறவினர்கள் போராட்டம்
Published on

புனே,

புனேயை சேர்ந்த 33 வயது பெண் ஒருவருக்கு பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து அவர் கடந்த மாதம் 29-ந் தேதி புனேயில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அவர் திடீர் மாயமானதாக தெரிகிறது. இதுகுறித்து குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்தனர்.

ஆனால் அந்த பெண் கடந்த 5-ந் தேதியே நோய் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மாயமான பெண்ணை கண்டுபிடிக்க முடியாததால், நேற்று கொரோனா சிகிச்சை மையம் முன்பு பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாயமான பெண்ணின் தாய் கூறியதாவது:-

எனது மகள் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்ட மறுநாளே நான் அவளை பார்க்க வந்தேன். ஆனால் இங்கிருந்த ஊழியர்கள் மகள் வார்டுக்குள் இருப்பதாகவும், பாதுகாப்பாக இருப்பதாகவும் சொன்னார்கள். என்னை 15 நாட்கள் கழித்து வருமாறு கேட்டுக்கொண்டனர்.

அவர்கள் சொன்னபடி கடந்த 13-ந் தேதி இங்கு வந்தபோது எனது மகளை காணவில்லை. எனது மகளை ஆம்புலன்சில் வீட்டுக்கும் அனுப்பி வைக்கவில்லை. 15 நாட்களுக்கு பிறகு என்னை வர சொல்லி விட்டு, 5-ந் தேதியே வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டதாக கூறுவது எப்படி? இதுகுறித்து சிவாஜிநகர் போலீசில் புகார் கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், கண்காணிப்பு கேமரா காட்சிகளை சம்பந்தப்பட்ட தற்காலிக முகாமில் இருந்து கேட்டுள்ளதாகவும் சிவாஜிநகர் போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com