புதுவண்ணாரப்பேட்டையில் பரிதாபம் தண்ணீர் கேனில் விழுந்து 3 வயது குழந்தை பலி

புதுவண்ணாரப்பேட்டையில் தண்ணீர் கேனில் தலைகுப்புற விழுந்து 3 வயது குழந்தை பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுவண்ணாரப்பேட்டையில் பரிதாபம் தண்ணீர் கேனில் விழுந்து 3 வயது குழந்தை பலி
Published on

பெரம்பூர்,

சென்னை புதுவண்ணாரப்பேட்டை சிவன் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ரோகேஷ். இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராதிகா. இந்த தம்பதியருக்கு 3 வயதில் மோனிஷ் என்ற பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தாய் ராதிகா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி உள்ளார். சாப்பாடு ஊட்டிய பிறகு பாத்திரங்களை அடுப்பறையில் வைப்பதற்கு உள்ளே சென்றுள்ளார்.

திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. குழந்தை தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் என்று நினைத்து வெளியே சென்று தேடி பார்த்துள்ளார். ஆனால் வெளியிலும் குழந்தையை காணவில்லை என்பதால் பல இடங்களில் தேடியுள்ளார்.

குளியலறைக்கு அருகில் சென்று பார்த்தபோது அங்குள்ள தண்ணீர் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் கேனில் குழந்தை தலைகுப்புற கவிழ்ந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டார். மோனிஷ் பிளாஸ்டிக் கேனில் உள்ள தண்ணீரில் விழுந்ததில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உள்ளது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து குழந்தையை மீட்டு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com