ராஜபாளையத்தில், கடன் தகராறில் பெண் அடித்துக்கொலை

ராஜபாளையத்தில் கடன் தகராறில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
ராஜபாளையத்தில், கடன் தகராறில் பெண் அடித்துக்கொலை
Published on

ராஜபாளையம்,

ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பூமாரி(வயது 30). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். பூமாரிக்கும், இதே பகுதியில் வசிக்கும் மாரிக் குமார் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தை காரணம் காட்டி பூமாரி, மாரிக்குமாரிடம் பணம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

கடன் வாங்கிய பணத்தை திரும்ப தருமாறு பலமுறை மாரிக்குமார், பூமாரியிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மாரியப்பன், பூமாரி ஆகியோர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். இவர்களது குழந்தைகள் அருகே உள்ள பாட்டி வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

நேற்று அதிகாலை மாரியப்பன் வீட்டிற்கு சென்ற, மாரிக்குமார் அங்கு உறங்கி கொண்டிருந்த கணவன்-மனைவி இருவரையும் தாக்கினார். மேலும் பூமாரியை சரமாரியாக அடித்து உதைத்ததில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் மாரிக்குமார் அங்கிருந்து தப்பியோடி விட்டார். தாக்கப்பட்டதில் படுகாயம் அடைந்த பூமாரி மற்றும் மாரியப்பன் ஆகியோரை தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக தூக்கி சென்றனர். ஆனால் ஏற்கனவே பூமாரி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தப்பியோடிய மாரிக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com