ராமநத்தம் அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

ராமநத்தம் அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ராமநத்தம் அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
Published on

ராமநத்தம்,

ராமநத்தம் அருகே மேல் ஆதனூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இக்கோவிலில் பூசாரியாக அதேஊரை சேர்ந்த வேலாயுதம் என்பவர் இருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்ததும் வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட் டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் கோவிலின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் அம்மன் கழுத்தில் கிடந்த பவுன் நகையை கொள்ளையடித்ததோடு, அங்கிருந்த 2 உண்டியல்களையும் அடியோடு பெயர்த்து எடுத்தனர்.

அதைத்தொடர்ந்து அந்த மர்மநபர்கள் மாரியம்மன் கோவிலின் அருகே உள்ள அய்யனார் கோவில் வளாகத்துக்குள் புகுந்து, அங்கிருந்த ஒரு உண்டியலையும் பெயர்த்து எடுத்து மொத்தம் 3 உண்டியல்களையும் வெளியே கொண்டு சென்றனர். பின்னர் அவர்கள் அதேஊரில் உள்ள ஒரு வயலில் வைத்து 3 உண்டியல்களின் பூட்டுகளையும் உடைத்து, அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு, உண்டியல்களை அதேஇடத்தில் போட்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நகை, பணம் கொள்ளை நடந்த 2 கோவில்களையும் பார்வையிட்டு பூசாரி வேலாயுதத்திடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், 2 கோவில்களிலும் சேர்த்து சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள நகை மற்றும் பணம் கொள்ளை போயிருக்கலாம் என்று தெரிகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com