ராயபுரத்தில் கேட்பாரற்று கிடந்த நட்சத்திர ஆமைகள் வனத்துறையிடம் ஒப்படைப்பு

ராயபுரத்தில் கேட்பாரற்று கிடந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நட்சத்திர ஆமைகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ராயபுரத்தில் கேட்பாரற்று கிடந்த நட்சத்திர ஆமைகள் வனத்துறையிடம் ஒப்படைப்பு
Published on

திருவொற்றியூர்,

சென்னை ராயபுரம் ஜி.எம்.பேட்டையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சிறுவர்கள் கையில் 2 நட்சத்திர ஆமைகளை வைத்து விளையாடிக்கொண்டிருந்தனர். அந்த வழியாக சென்ற சாந்தி(வயது 40) என்ற பெண், சிறுவர்களின் கையில் வித்தியாசமான ஆமைகள் இருப்பதை கண்டு அருகில் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக தீயணைப்பு துறையினர் அப்பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது குடியிருப்புகள் நிறைந்த அந்த பகுதியில் ஆங்காங்கே ஆமைகள் ஊர்ந்து செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி விசாரித்தபோது விளையாட்டு மைதானத்தின் அருகே அட்டைப்பெட்டியில் உயிருடன் ஏராளமான நட்சத்திர ஆமைகள் கேட்பாரற்ற நிலையில் கிடப்பது தெரிந்தது. தீயணைப்பு வீரர்கள் அவற்றை பறிமுதல் செய்து தீயணைப்பு நிலையம் கொண்டு சென்றனர். பின்னர் வனத்துறையினரை வரவழைத்து அவர்களிடம் 41 நட்சத்திர ஆமைகளை ஒப்படைத்தனர்.

மீட்கப்பட்ட நட்சத்திர ஆமைகளின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். அந்த நட்சத்திர ஆமைகள் அங்கு வந்தது எப்படி? என்பது குறித்து அந்த பகுதி மக்களிடம் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வெளிநாட்டுக்கு கடத்தி செல்வதற்காக மர்ம நபர்கள் யாராவது நட்சத்திர ஆமைகளை அங்கு பதுக்கி வைத்து உள்ளனரா? அல்லது போலீசாருக்கு பயந்து யாரேனும் மைதானத்தில் மறைத்து வைத்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com