சேலம் மாவட்டத்தில், அ.தி.மு.க. சார்பில் அம்மா உணவகங்களில் இன்று முதல் இலவச உணவு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சேலம் மாவட்டத்தில் உள்ள 15 அம்மா உணவகங்களிலும் அ.தி.மு.க. சார்பில் இன்று முதல் காலை மற்றும் மதியம் இலவச உணவு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில், அ.தி.மு.க. சார்பில் அம்மா உணவகங்களில் இன்று முதல் இலவச உணவு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
Published on

சேலம்,

தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாநகராட்சியில் 11 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் ஆத்தூர், நரசிங்கபுரம், எடப்பாடி, மேட்டூர் ஆகிய 4 நகராட்சிகளிலும் என மொத்தம் 15 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு சூடான, தரமான, சுவையான காலை டிபன் மற்றும் மதியம் 3 வகையான கலவை சாத வகைகள் அரசு நிர்ணயித்த மலிவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த உணவகங்களில் பெரும்பாலும் கூலித்தொழிலாளர்கள் மற்றும் வசதி குறைவான ஏழை, எளிய மக்கள் உணவருந்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, அவர்கள் போதிய வருமானம் இன்றி உள்ளனர். எனவே அவர்களுக்கு உதவும் வகையில், அ.தி.மு.க. சார்பில் இன்று (திங்கட்கிழமை) முதல் சேலம் மாநகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் 11 அம்மா உணவகங்களிலும், ஆத்தூர், நரசிங்கபுரம், எடப்பாடி, மேட்டூர் ஆகிய 4 நகராட்சிகளில் உள்ள அம்மா உணவகங்களிலும் காலை மற்றும் மதியம் வேளைகளில் உணவருந்தும் அனைவருக்கும் இலவச உணவு வழங்கப்படும். இதற்கான செலவை சேலம் புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. ஏற்றுக்கொள்ளும்.

மேலும், சேலம் மாநகராட்சியில் 2,112 தூய்மை பணியாளர்களும், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 356 தூய்மைப் பணியாளர்களும், மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 25 தூய்மை பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் போதும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இவர்களின் சேவையை பாராட்டி, ஊக்கப்படுத்தும் வகையில் தூய்மை பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் 10 கிலோ அரிசி, மற்றும் மே மாதம் 3-ந் தேதி வரை தினமும் ஒவ்வொரு முக கவசத்தை சேலம் புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. வழங்கும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com