சேலத்தில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்

பசுமை வழிச்சாலை, விமான நிலைய விரிவாக்கத்திற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து சேலத்தில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலத்தில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
Published on

சேலம்,

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சேலம் புறநகர் கிழக்கு, மேற்கு மாவட்டம் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் ஏ.ஆர்.இளங்கோவன் தலைமை தாங்கினார். சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், மகளிர் அணி செயலாளர் மாலதி, கேப்டன் மன்ற துணை செயலாளர் சுல்தான் பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சேலம் விமான நிலைய விரிவாக்கம் மற்றும் சேலம்-சென்னை இடையே பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாய நிலங்களை அழிக்க கூடாது என்றும், விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்றும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஆர்.இளங்கோவன் பேசும் போது, தமிழக முதல்-அமைச்சரும், மாவட்ட நிர்வாகமும் 8 வழிச்சாலைக்கு விவசாயிகள் தானாக முன்வந்து நிலங்களை கொடுப்பதாக கூறினர். ஆனால் விவசாயிகள் அனைவரும் நிலங்களை தாய் போல் காத்து விவசாயம் செய்து வருவதால் அவற்றை கொடுக்க முன்வரவில்லை. போலீசாரை வைத்து மிரட்டி நிலங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னைக்கு செல்ல பல வழிகள் உள்ளதால் இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றார்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. சுபா, மாணவர் அணி துணை செயலாளர் ஆனந்த்பாபு, காடையாம்பட்டி ஒன்றிய செயலாளர் சுகுமார், பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர் மாணிக்கம், ஓமலூர் ஒன்றிய செயலாளர் வடிவேல், வீரபாண்டி ஒன்றிய செயலாளர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com