பள்ளிப்பட்டு தாலுகாவில் ரேஷன் பொருட்கள் சரிவர வழங்காததை கண்டித்து மறியல் போக்குவரத்து பாதிப்பு

பள்ளிப்பட்டு தாலுகாவில் ரேஷன் பொருட்கள் சரிவர வழங்காததை கண்டித்து மறியல் போராட்டம் நடந்தது. இதனால் அந்த வழித்தடத்தில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பள்ளிப்பட்டு தாலுகாவில் ரேஷன் பொருட்கள் சரிவர வழங்காததை கண்டித்து மறியல் போக்குவரத்து பாதிப்பு
Published on

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா கீச்சலம் ஊராட்சியில் கீச்சலம், புது கீச்சலம், கீச்சலம் காலனி போன்ற பகுதிகள் உள்ளன. இங்கு 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கீச்சலம் கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது.

இங்கு இந்த பகுதி மக்களுக்கு தேவையான சமையல் எண்ணெய், மண்எண்ணெய் போன்ற ரேஷன் பொருட்கள் சரிவர வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த பகுதி மக்கள் தங்களுக்கு ரேஷன் பொருட்களை சரிவர வழங்க வேண்டும் என்று கூறி நேற்று திருத்தணி-பொதட்டூர்பேட்டை சாலை கீச்சலம் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்ததும் பொதட்டூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன்ராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். வருவாய் ஆய்வாளார் அற்புதராஜ் கீச்சலம் கிராமத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அடுத்த மாதம் ரேஷன் பொருட்கள் கூடுதல் ஒதுக்கீடு பெற்று சரிவர வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதை தொடர்ந்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். மறியல் போராட் டம் காரணமாக அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com