இடையர்பாளையத்தில் தாய் இறந்த அதிர்ச்சியில் மகள் தற்கொலை - மகனுக்கு தீவிர சிகிச்சை

இடையர்பாளையத்தில் தாய் இறந்த அதிர்ச்சியில் மகள் தற்கொலை செய்து கொண்டார். மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
இடையர்பாளையத்தில் தாய் இறந்த அதிர்ச்சியில் மகள் தற்கொலை - மகனுக்கு தீவிர சிகிச்சை
Published on

துடியலூர்,

கோவை கவுண்டம்பாளையம் அருகே இடையர்பாளையம் மாகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜன். இவருடைய மனைவி சிந்து (வயது 27). இவர்களுக்கு திருமணம் முடிந்து 6 வருடம் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை. சிந்துவுடன் அவருடைய தாய் செல்வி (58), தம்பி இந்தியன் (23) ஆகியோரும் வசித்து வந்தனர்.

சிந்துவின் தந்தை இறந்து விட்டதால் செல்வி வேலைக்கு சென்று குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினார். இந்த நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் செல்வியின் உடல்நிலை மிகவும் மோசமானதால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

தங்களை கஷ்டப்பட்டு ஆளாக்கிய தாய் திடீரென்று இறந்ததால் சிந்துவும், இந்தியனும் அதிர்ச்சி அடைந்தனர். தாய் இல்லாமல் தங்களால் வாழ முடியாது என்று கருதிய அவர்கள் 2 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து வாழ்க்கையில் விரக்தி அடைந்த சிந்துவும், இந்தியனும் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர்.

இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிசிச்சை பலன் அளிக்காமல் சிந்து பரிதாபமாக இறந்தார். இந்தியனுக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்த புகாரின் பேரில் துடியலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தாய் இறந்த அதிர்ச்சியில் மகள் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com