சுரண்டையில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் கனிமொழி எம்.பி. வழங்கினார்

சுரண்டையில் ஒன்றிய தி.மு.க. சார்பில், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சுரண்டையில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் கனிமொழி எம்.பி. வழங்கினார்
Published on

சுரண்டை,

சுரண்டை கலைஞர் நினைவாலயத்தில் ஒன்றிய தி.மு.க. சார்பில், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 97 கர்ப்பிணிகள், 100 விவசாயிகள், வாடகை கார் ஓட்டுனர்கள் ஆகியோருக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. ஏழை பெண்களுக்கு நிலைக்கதவு, பால் முகவர்களுக்கு பால் கேன், கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு உதவித்தொகை, நினைவு பரிசு வழங்கப்பட்டது.

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், வருவாய் அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு பதக்கங்களையும் கனிமொழி எம்.பி. வழங்கினார். தொழில் அதிபர் முருகேச பாரதிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. சுரண்டை டாக்டர்கள் சார்பில், கனிமொழி எம்.பி.க்கு நினைவு பரிசு வழங்கினர்.

கொரோனா காலத்தில் தென்காசி மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு நலத்திட்ட உதவி வழங்கிய தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாபன், ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் ஆகியோரை கனிமொழி எம்.பி. பாராட்டி பரிசு வழங்கினார். மேலும் இதுபோன்று தி.மு.க.வினர் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்குவார்கள் என்றும் தெரிவித்தார். முன்னதாக சுரண்டையில் உள்ள அண்ணா சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கலைஞர் நினைவாலயத்தில் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் உருவ படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com