தாம்பரத்தில் கழிவுநீர் தேங்கிய கால்வாய் அடைப்பை நீக்கும் பணி தொடங்கியது

தாம்பரம் சானடோரியம் பஸ் நிறுத்தம் அருகே சர்வீஸ் சாலையில் கழிவுநீர் தேங்கியிருந்த பகுதியில் கால்வாய் அடைப்புகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கியது.
தாம்பரத்தில் கழிவுநீர் தேங்கிய கால்வாய் அடைப்பை நீக்கும் பணி தொடங்கியது
Published on

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியம் பஸ் நிறுத்தம் அருகே சர்வீஸ் சாலையில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக கழிவுநீர் தேங்கியிருந்தது. இதனால் அந்த சாலையில் நடந்துசெல்ல முடியாமல் பாதசாரிகளும், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும் கடும் அவதிப்பட்டனர்.

கழிவுநீர் தேங்கியதால் கடுமையான துர்நாற்றத்துடன், கொசு உற்பத்தியும் அதிகமாகி சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் நிலை ஏற்பட்டது. இதுதொடர்பான பொதுமக்களின் கோரிக்கை குறித்த செய்தி நேற்று முன்தினம் தினத்தந்தியில் படத்துடன் வெளியானது.

இதனைத்தொடர்ந்து தாம்பரம் நகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியை பார்வையிட்டு உடனடி நடவடிக்கை எடுத்தனர். ஜே.சி.பி. எந்திரம் மூலம் கால்வாய் அடைப்புகளை சரிசெய்யும் பணி நேற்று தொடங்கியது.

இதுகுறித்து நகராட்சி பொறியாளர் ரவிசந்திரன் கூறுகையில், மழைநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள கழிவுமண் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றப்படுகிறது. மண் காய்ந்தவுடன் லாரிகள் மூலம் அப்பகுதியில் இருந்து அகற்றப்படும். கால்வாயில் அடைப்புகள் ஏற்படாமல் இருக்க அனைத்து கழிவுகளையும் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

உடனடி நடவடிக்கை எடுக்க உதவும் வகையில் செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com