

மும்பை,
ஆண், பெண் இருபாலரும் சமம் என்பதை உணர்த்தும் வகையில் ஜெர்மனி, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் போக்குவரத்து சிக்னல் விளக்குகளில் பெண் உருவ படங்கள் இடம்பெற்று உள்ளன. இந்தியாவை பொருத்தவரை சிக்னல் விளக்குகளில் ஆண் உருவ படம் மட்டுமே இடம்பெற்று இருக்கும்.
இந்தநிலையில் நாட்டில் முதல் முறையாக மும்பையில் சிக்னல் விளக்குகளில் பெண் உருவம் இடம்பெற்று உள்ளது. ஆண், பெண் சமம் என்பதை உணர்த்தும் வகையில் மும்பை மாநகராட்சி இதை செய்து உள்ளது.
மும்பை மாகிம் போலீஸ் நிலையம் முதல் பிரபாதேவி வரை 13 சந்திப்புகளில் உள்ள சிக்னல் விளக்குகளில் பெண் படம் வைக்கப்பட உள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி கிரன் திகாவ்கர் கூறுகையில், பாலின சமத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த திட்டத்தை தொடங்கி உள்ளோம். இதற்காக தாதரில் புதிய சிக்னல் வைக்கப்பட்டுள்ளது என்றார்.
மாநகராட்சியின் இந்த நடவடிக்கையை பாராட்டிய மந்திரி ஆதித்ய தாக்கரே, மேயர் கிஷோரி பெட்னேகர், மாநகராட்சி அதிகாரி கிரன் திகாவ்கர், சதா சர்வன்கர் எம்.எல்.ஏ. ஆகியோருக்கு நன்றி கூறியுள்ளார்.