மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளுக்கு ‘சீல்’

சேலம் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு பூட்டி ‘சீல்‘ வைக்கப்பட்டது.
மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளுக்கு ‘சீல்’
Published on

சேலம்,

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் 3,288 வாக்குச்சாவடிகள், 11 துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பயன்படுத்தப்பட வேண்டிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், வி.வி. பேட் எந்திரங்கள் ஆகியவற்றை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு வாக்குச்சாவடிகளுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.

சேலம் தெற்கு சட்டசபை தொகுதியில் வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், வி.வி. பேட் எந்திரங்கள் ஆகியவை அம்மாபேட்டையில் உள்ள சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் நேற்று உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சதீஷ் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதேபோல் சேலம் வடக்கு, வீரபாண்டி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கும் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளை அந்தந்த தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

கெங்கவல்லி சட்டசபை தொகுதிக்கான எந்திரங்கள் கெங்கவல்லி தாலுகா அலுவலகத்திலும், ஆத்தூர் சட்டசபை தொகுதிக்கு ஆத்தூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஏற்காடு சட்டசபை தொகுதிக்கு வாழப்பாடியில் உள்ள தாலுகா அலுவலகத்திலும், சங்ககிரி சட்டசபை தொகுதிக்கு சங்ககிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், மேட்டூர் சட்டசபை தொகுதிக்கு மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்திலும் உள்ள அறைகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளுக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர். மாவட்டத்தில் மீதமுள்ள சேலம் மேற்கு, ஓமலூர், எடப்பாடி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஓரிரு நாட்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும், எந்திரங்கள் வைக்கப்படும் அறைக்கு பூட்டி சீல் வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com