குளியல் அறையில் வழுக்கி விழுந்து வெல்டர் பலி: மகளின் மஞ்சள் நீராட்டு விழா முடிந்து வீட்டுக்கு வந்தபோது சோகம்

மகளின் மஞ்சள் நீராட்டு விழா முடிந்து வீட்டுக்கு வந்த வெல்டர், குளியல் அறையில் வழுக்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
குளியல் அறையில் வழுக்கி விழுந்து வெல்டர் பலி: மகளின் மஞ்சள் நீராட்டு விழா முடிந்து வீட்டுக்கு வந்தபோது சோகம்
Published on

பூந்தமல்லி,

சென்னை முகப்பேர், 6-வது பிளாக்கை சேர்ந்தவர் அசோக்குமார்(வயது 38). வெல்டிங் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி எழிலரசி. இவர்களது மகள் சீதாலட்சுமி. நேற்று முன்தினம் அங்குள்ள திருமண மண்டபத்தில் சீதாலட்சுமிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. விழா முடிந்து திருமண மண்டபத்தில் இருந்து அனைவரும் வீட்டுக்கு வந்தனர்.

அப்போது குளியல் அறைக்குள் சென்ற அசோக்குமார், நீண்டநேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய மனைவி எழிலரசி, குளியல் அறைக்குள் சென்று பார்த்தார். அங்கு தனது கணவர் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அசோக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர், குளியல் அறையில் வழுக்கி விழுந்து பலியானது தெரிந்தது.

இதுபற்றி நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அவரது உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com