காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து வங்கி மேலாளரிடம் நகை பறிப்பு

காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து வங்கி மேலாளரிடம் 35 பவுன் நகைகளை பறித்த பெண் மீது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து வங்கி மேலாளரிடம் நகை பறிப்பு
Published on

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 50). இவர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

நான் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த ஒரு பெண் வங்கிக்கு வந்தார். அவர் தனக்கு ஒரு வீடு இருப்பதாகவும், அதனை இடித்துவிட்டு புதிதாக வீடு கட்ட கடன் வழங்குமாறும் தெரிவித்தார். இதற்கான விண்ணப்பத்தையும் கொடுத்தார். இதையடுத்து அந்த வீட்டை பார்த்துவிட்டு கடன் வழங்குவதாக தெரிவித்தேன்.

இந்தநிலையில், சம்பவத்தன்று அந்த வீட்டை பார்ப்பதற்காக திண்டுக்கல் பேகம்பூருக்கு எனது காரில் சென்றேன். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்துவிட்டு பத்திரத்தை வாங்கி படித்து கொண்டிருந்தேன். அப்போது அந்த பெண் ஒரு தம்ளரில் காபி கொடுத்தார். அதனை வாங்கி குடித்தவுடன் அந்த வீட்டிலேயே மயங்கிவிட்டேன்.

பின்னர், இரவு 8 மணியளவில் மயக்கம் தெளிந்து பார்த்தேன். அப்போது மர்ம நபர்கள் 4 பேர் என்னை சுற்றி நின்று கொண்டு என்னை தாக்க தொடங்கினர். மேலும், எனது செல்போன், கார் சாவி ஆகியவற்றையும் பறித்து வைத்து கொண்டனர். இதையடுத்து ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டினர்.

பணம் தரவில்லையெனில், எனது மகன்கள் 2 பேரையும் கடத்தி கொன்றுவிடுவதாகவும் தெரிவித்தனர். இதனால் பயந்துபோன நான் காரில் இருந்த எனது மனைவியின் 35 பவுன் நகையை எடுத்து கொடுத்தேன். உடனே என்னை விட்டுவிட்டனர். எனக்கு காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகைகளை பறித்த பெண் மற்றும் மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும், 35 பவுன் நகைகளை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com