போதைப்பொருள் வழக்கில் நடிகை ரகுல் பிரீத்சிங் விசாரணைக்கு வரவில்லை இன்று ஆஜராகிறார்?

போதைப்பொருள் வழக்கில் நடிகை ரகுல் பிரீத்சிங் நேற்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் இன்று ஆஜராகலாம் என கூறப்படுகிறது.
போதைப்பொருள் வழக்கில் நடிகை ரகுல் பிரீத்சிங் விசாரணைக்கு வரவில்லை இன்று ஆஜராகிறார்?
Published on

மும்பை,

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து, இந்தி திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் தனது காதலன் சுஷாந்த் சிங்கிற்காக போதைப்பொருள் வாங்கியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நடிகை ரியா சக்ரவர்த்தி கடந்த 8-ந் தேதி கைது செய்யப்பட்டார். அவரது தம்பி சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் திரையுலகை சேர்ந்த சிலரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது பிரபல தமிழ் மற்றும் இந்தி நடிகைகளான ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோனே, இந்தி நடிகைகள் சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோருக்கும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதில் சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோரின் பெயரை நடிகை ரியா பகிரங்கப்படுத்தி உள்ளார்.

இந்தநிலையில் நடிகைகள் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று முன்தினம் சம்மன் அனுப்பினர். அதில் ரகுல் பிரீத்சிங் நேற்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் அதன்படி அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. வெளியூரில் இருப்பதால் அவர் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு ஆஜராவார் என்று கூறப்படுகிறது.

முன்னதாக ரகுல் பிரீத்சிங் தனக்கு சம்மன் கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார். ஆனால் அதை மறுத்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ரகுல் பிரீத்சிங் சம்மனை பெற்று விட்டார் என்று உறுதிப்படுத்தினர். இதுகுறித்து விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், சம்பந்தப்பட்ட நடிகையை போன் மற்றும் வேறு வழிகளில் தொடர்பு கொண்டுள்ளோம். அவர் விரைவில் விசாரணைக்கு ஆஜராவார் என்றார்.

மேலும் அந்த அதிகாரி கூறுகையில், போதைப்பொருள் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்துள்ளோம். சுஷாந்த் சிங் மரணத்துடன் தொடர்புபடுத்தி ஒரு வழக்கும், இந்தி திரையுலகம் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கியது தொடர்பாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த இரு வழக்கையும் பொதுவான கோணத்திலும் விசாரித்து வருகிறோம்.

நடிகை சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோரிடம் இரண்டு வழக்குகள் தொடர்பாகவும் கேள்விகள் கேட்டு விசாரிக்கப்படும் என்றார்.

தீபிகா படுகோனே இன்று (வெள்ளிக்கிழமை), சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோர் நாளை(சனிக்கிழமை) ஆஜராக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் உத்தரவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com