

குத்தாலம்,
குத்தாலம் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி மற்றும் போலீசார், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது குத்தாலம் அருகே மாம்புள்ளி கீழத்தெருவை சேர்ந்த மாரிமுத்து மகன் ராமலிங்கம் (வயது 32) என்பவரின் வீட்டை சோதனை செய்தனர்.
அவரது வீட்டின் பின்புறம் புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமலிங்கம், அவரது தந்தை மாரிமுத்து (75), திருவாவடுதுறை இந்திரா காலனியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (28) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 38 அட்டை பெட்டிகளில் 2 ஆயிரத்து 688 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
குத்தாலம் அருகே வில்லியநல்லூர் பிரதான சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார், மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்தி சென்றது தெரியவந்தது. உடனே போலீசார், 21 அட்டை பெட்டிகளில் இருந்த 1,104 மதுபாட்டில்கள், கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறி முதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வில்லியநல்லூரை சேர்ந்த பாஸ்கர் (55) என்பவரை கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய தத்தங் குடியை சேர்ந்த ராஜி என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.