வீடு புகுந்து திருடிய வழக்கில் வாலிபர் கைது நகைகளை வாங்கிய 2 கடைக்காரர்களும் பிடிபட்டனர்

திருவள்ளூர் அருகே வீடு புகுந்து திருடிய வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் திருட்டு நகைகளை வாங்கியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வீடு புகுந்து திருடிய வழக்கில் வாலிபர் கைது நகைகளை வாங்கிய 2 கடைக்காரர்களும் பிடிபட்டனர்
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டை சேர்ந்தவர் வினோத். இவர் கடந்த ஏப்ரல் மாதம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியே சென்றார். 2 நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்தபோது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த தங்க நகைகள், ரொக்கப்பணம், வெள்ளிப்பொருட்கள் திருடப்பட்டிருந்தது. இது குறித்து வினோத் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் செவ்வாப்பேட்டை போலீசார் பெருமாள்பட்டு, செவ்வாப்பேட்டை போன்ற பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த ஒரு வாலிபர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை விரட்டிச்சென்று பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அந்த நபர் திருவள்ளூரை அடுத்த நெமிலிச்சேரி நாகாத்தம்மன் நகரை சேர்ந்த ராஜ்குமார் (வயது 34) என்பது தெரிய வந்தது. அவர் வினோத் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் அவர் தான் திருடிய நகைகளை திருவள்ளூரை அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள மாதர்பாக்கத்தை சேர்ந்த பவர்லால் (47) என்பவரின் அடகு கடையிலும், காஞ்சீபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தை சேர்ந்த கருப்பையா(62) என்பவரின் நகைக்கடையிலும் விற்றதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் பவர்லால், கருப்பையா மற்றும் ராஜ்குமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 பவுன் நகையை போலீசார் கைப்பற்றினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com