மறைமலை நகரில் குடோனில் பதுக்கிய ரூ.25 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

மறைமலை நகரில் குடோனில் பதுக்கிய ரூ.25 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மறைமலை நகரில் குடோனில் பதுக்கிய ரூ.25 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்
Published on

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள காமராஜர் சாலையில் உள்ள ஒரு தனியார் குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மறைமலைநகர் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனை திறந்து சோதனை செய்தனர்.

அப்போது அங்கு குவியல் குவியலாக பாக்கு மர மட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பாக்கு மர மட்டைகளை அகற்றியபோது அங்கு செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக மறைமலை நகர் போலீசார் செங்கல்பட்டு வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு செங்கல்பட்டு மாவட்ட வனத்துறை அதிகாரிகளும் விரைந்து வந்து குடோன் முழுவதும் உள்ள அறைகளை சோதனை செய்தனர். அப்போது வீடுகளில் பயன்படுத்தப்பட்ட பழைய செம்மரக்கட்டைகளும், புதிய செம்மரக்கட்டைகள் உள்பட சுமார் 5 அடியில் இருந்து 6 அடி உயரம் உள்ள 578 செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என்றும், சுமார் 5 டன் எடை கொண்டது என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் கைப்பற்றி செம்மரக்கட்டைகளை பதுக்கி வைக்கப்பட்டு இருந்த குடோன் யாருக்கு சொந்தமானது? எப்படி செம்மரக்கட்டைகள் இங்கு வந்தது?

ஆந்திராவில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்து இங்கு வியாபாரம் செய்கிறார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். செம்மரக்கட்டைகள் பதுக்கியது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com