வாகனம் மோதியதில் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 3 வாலிபர்கள் பலி

தண்டராம்பட்டு அருகே ஒரே மோட்டார்சைக்கிளில் சென்ற 3 வாலிபர்கள் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார்கள்.
வாகனம் மோதியதில் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 3 வாலிபர்கள் பலி
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த கீழ்திருவடத்தனூரை சேர்ந்தவர் ஷாபுதின். இவரது மகன் தாகீர் (வயது 20), அதே பகுதியை சேர்ந்த அகமத்பாஷா மகன் காலித் (25), ஷாஜகான் மகன் ஷாஜித் (24) ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் திருவண்ணாமலைக்கு வந்து விட்டு ஒரே மோட்டார்சைக்கிளில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

கீழ் சிறுபாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி அருகில் செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு சென்று விட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்களில் காலித், ஷாஜித் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மேலும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தாகீரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த தண்டராம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் காலித், ஷாஜித் ஆகியோரின் உடல்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதேபோல் தாகீர் உடலையும் அரசு மருத்துவமனை வார்டிலிருந்து பிரேத பரிசோதனை அறைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com