குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து குறைந்தது சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளித்தனர்

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து குறைந்தது. சுற்றுலா பயணிகள் வரிசையில் காத்து நின்று குளித்தனர்.
குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து குறைந்தது சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளித்தனர்
Published on

தென்காசி,

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த காலங்களில் தமிழகத்தில் இருந்து மட்டும் அல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு வந்து குளித்து செல்வார்கள்.

இந்த ஆண்டு குற்றாலத்தில் சீசன் தாமதமாக கடந்த 10-ந் தேதி தொடங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது. இதனால் அருவிகளில் தண்ணீர் அதிகரித்தது. மெயின் அருவியில் ஆர்ச்சை தொட்டு தண்ணீர் விழுந்தது.

ஆனால் கடந்த 3 நாட்களாக குற்றாலத்தில் சாரல் மழை பெய்யவில்லை. நேற்றும் கடும் வெயில் அடித்தது. காற்று வேகமாக வீசியது. மழை இல்லாததால் அருவிகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டது.

மெயின் அருவியில் குறைந்த அளவே தண்ணீர் விழுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்து நின்று குளித்துச் சென்றனர். ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் குறைவாக விழுகிறது. இங்கும் பெண்கள் வரிசையில் நின்று குளித்தனர். பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் வெகுவாக குறைந்து விட்டது. குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் குறைவாகவே உள்ளது. சாரல் மழை பெய்தால்தான் இனி அருவிகளில் நீர்வரத்து அதிகரிக்கும் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com