சிலிண்டர் வெடித்த விபத்தில் மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி சாவு பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு

லால்பாக்கில் சிலிண்டர் வெடித்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.
சிலிண்டர் வெடித்த விபத்தில் மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி சாவு பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு
Published on

மும்பை,

மும்பை லால்பாக் கணேஷ் கல்லி அருகே சாராபாய் என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கிருந்த 16 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து காயமடைந்தவர்கள் மசினா மற்றும் கே.இ.எம். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ஏற்கனவே 6 பேர் பலியாகினர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி சூர்யகாந்த்(வயது60), ஓம் ஷிண்டே(20) ஆகியோர் பலியாகினர்.

இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. சிலிண்டர் வெடித்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் 5 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஏற்கனவே 3 பேர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஏற்கனவே சிலிண்டர் வெடித்த விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்-மந்திரி நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என உத்தவ்தாக்கரே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com