பேட்டையில் பயங்கர ஆயுதங்களுடன் 2 வாலிபர்கள் கைது

பேட்டையில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
பேட்டையில் பயங்கர ஆயுதங்களுடன் 2 வாலிபர்கள் கைது
Published on

பேட்டை,

பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகதாஸ் மற்றும் போலீசார் நேற்று புறக்காவல் நிலையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும், மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த அரிவாள், வாள், கத்தி, மான்கொம்பு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தப்ப முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், அவர்கள் நெல்லை மாவட்டம் மானூரை அடுத்த ரஸ்தாவை சேர்ந்த முருகன் மகன் முத்துக்குமார் (வயது 25), அவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் முருகேஷ் என்ற மூக்காண்டி (25) என்பதும், இவர்கள் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து பாளையங்கோட்டை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

எதிரிகள் அவர்களை தீர்த்துகட்டி விடாமல் இருக்க பாதுகாப்பிற்காக ஆயுதங்களை வைத்திருந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com