

சோளிங்கர்,
சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம் மேல்வீராணம் கிராமத்தில் சிறப்பு சிறப்பு மனுநீதிநாள் முகாம் கலெக்டர் ராமன் தலைமையில் நடந்தது. அரக்கோணம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. கோ.அரி முன்னிலை வகித்தார். உதவி கலெக்டர் (பொறுப்பு) வேணுசேகரன் வரவேற்றார்.
முகாமில் 274 பயனாளிகளுக்கு ரூ.67 லட்சத்து 84 ஆயிரத்து 690 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராமன் வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
இந்த மனுநீதிநாள் முகாமில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் திட்ட விளக்க கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த அரங்குகளுக்கு சென்று அலுவலர்களிடம் இத்திட்டம் தங்களுக்கு கிடைத்திட உரிய வழிமுறைகளை கேட்டறிந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபட்டு, அதிகளவில் விளைவிக்கின்றனர். இவற்றை விற்பனை செய்ய விற்பனை சந்தை மையம் அமைக்கவும், கிராமத்திற்கு பஸ் வசதியை ஏற்படுத்தவும், துணை சுகாதார வசதியினை ஏற்படுத்தவும் கோரிக்கை வைத்துள்ளனர். இவற்றின் சாதகமான சூழ்நிலைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக அரசு தகுதியான ஏழை, எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. இந்த நலத்திட்ட உதவிகளை தகுதியான நபர்கள் அனைவரும் உரிய வழிமுறைகளை பின்பற்றி நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (மருத்துவப் பணிகள்) சுரேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜி.சி.சிங், ஜம்புகுளம் கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் பெல்.கார்த்திகேயன், எஸ்.சி.ஏழுமலை, வட்டார மருத்துவ அலுவலர் சுமதி, மாவட்ட தாட்கோ மேலாளர் பிரேமா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ருத்திரமூர்த்தி, சுப்பிரமணி, அ.தி.மு.க. ஒன்றிய அவைத்தலைவர் ஏ.எல்.சாமி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் தாசில்தார் பூமா நன்றி கூறினார்.