நடுக்கடலில் பழுதடைந்த விசைப்படகு இரண்டாக உடைந்தது 6 மீனவர்கள் உயிர் தப்பினர்

நடுக்கடலில் பழுதடைந்த விசைப்படகு திடீரென்று இரண்டாக உடைந்தது. அதில் இருந்த 6 மீனவர்கள் பத்திரமாக உயிர்தப்பினர்.
நடுக்கடலில் பழுதடைந்த விசைப்படகு இரண்டாக உடைந்தது 6 மீனவர்கள் உயிர் தப்பினர்
Published on

காலாப்பட்டு,

புதுவை வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் பாவாடைராயன். இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 9-ந் தேதி பாவாடைராயன், அதே பகுதியை சேர்ந்த பாலு, வேல்முருகன், சரவணன், மோகன், ரவி ஆகிய 6 பேர் தேங்காய்திட்டு துறைமுகத்தில் இருந்து மரக்காணம் நோக்கி மீன்பிடிக்கச் சென்றனர்.

விழுப்புரம் மாவட்டம் அனுமந்தை அருகே நடுக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென விசைப்படகில் ஓட்டை விழுந்தது. அதன் வழியாக தண்ணீர் சிறுக சிறுக உள்ளே புகுந்தது. இதைக் கண்டு மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் இருந்து தண்ணீரை வெளியேற்ற முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. நேரம் செல்ல செல்ல தண்ணீர் அதிகமாக புகுந்தது.

இரண்டாக உடைந்தது

இதனால் செய்வதறியாமல் தவித்த மீனவர்கள், வீராம்பட்டினத்தை சேர்ந்த மீனவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து, தங்களை மீட்க வருமாறு கூறினர். இதற்கிடையில் அனுமந்தை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களின் உதவியை நாடினர். அவர்கள் மற்றொரு படகில் சென்று நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்துவந்தனர்.

பழுதடைந்த படகை தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு வரும் முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டனர். ஆனால் படகு முழுவதும் தண்ணீர் நிரம்பியதால் காலாப்பட்டு அருகே சின்ன காலாப்பட்டு கடல் பகுதியில் நேற்று காலை கரை ஒதுங்கி, கவிழ்ந்தது. படகில் இருந்த டிரைவர் நீந்தி பத்திரமாக கரைக்கு வந்து சேர்ந்தார். கவிழ்ந்த படகை கயிறுகட்டி மீட்பு பணியில் ஈடுபட்டபோது திடீரென படகு இரண்டாக உடைந்தது.

படகு உடைந்தது குறித்து காலாப்பட்டு போலீஸ் மற்றும் மீன் வளத்துறைக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com