

சங்ககிரி,
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளையொட்டி சங்ககிரியில் அவரது நினைவுச்சின்னத்தில் உள்ள உருவப்படத்துக்கு சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையை கவுரவிக்கும் வகையில் சேலம் மாவட்டம் சங்ககிரியில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி ரூ.60 லட்சம் மதிப்பில் தீரன் சின்னமலை நினைவுச்சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது. தீரன் சின்னமலையின் பிறந்தநாளான நேற்று சங்ககிரியில் உள்ள அவரது நினைவுச்சின்னத்தில் சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரோகிணி கலந்து கொண்டு, தீரன் சின்னமலை நினைவுச்சின்னத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் சேலம் தொகுதி எம்.பி. பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.க்கள் மேட்டூர் செம்மலை, சங்ககிரி ராஜா, வீரபாண்டி மனோன்மணி மற்றும் அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் ராமதுரை முருகன், தாசில்தார் அருள், அட்மா குழு தலைவர் என்.எஸ்.எம்.மணி, சங்ககிரி பேரூராட்சி முன்னாள் தலைவர் செல்லப்பன், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.