சோழவரத்தில் வாலிபர் கொலை வழக்கில் ரவுடி கைது 2 பேருக்கு வலைவீச்சு

சோழவரத்தில் வாலிபர் கொலை வழக்கில் ரவுடி கைது, தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சோழவரத்தில் வாலிபர் கொலை வழக்கில் ரவுடி கைது 2 பேருக்கு வலைவீச்சு
Published on

செங்குன்றம்,

சென்னை வியாசர்பாடி பி.வி காலனி கக்கன்ஜி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் திவாகர் (வயது 24). இவர் கடந்த 30-ந் தேதி இரவு சோழவரம் ஏரிக்கரை அருகே கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்தநிலையில், இந்த வழக்கு தொடர்பாக செங்குன்றத்தை அடுத்த ஆட்டந்தாங்கல் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்கிற குதிரை சுரேஷ் என்பவரை நேற்று சோழவரம் அருகே போலீசார் கைது செய்தனர். பிரபல ரவுடியான சுரேஷ் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சுரேஷ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், கடந்த 2017-ம் ஆண்டு வியாசர்பாடியை சேர்ந்த எனது நண்பர் சீனா என்பவர் கொலை செய்யப்பட்டார். அதற்கு பழிக்குப்பழி வாங்க வியாசர்பாடியை சேர்ந்த எனது நண்பர்கள் கணேசன், அரி ஆகியோர் சேர்ந்து திவாகரை கொலை செய்தோம் என கூறி இருந்தார். இதையடுத்து போலீசார் சுரேசை பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கணேசன், அரி ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com