மூதாட்டியிடம் நூதன முறையில் 6½ பவுன் நகை கொள்ளை போலீஸ் போல் நடித்து கைவரிசை

குளச்சலில் போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் நூதன முறையில் 6½ பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மூதாட்டியிடம் நூதன முறையில் 6½ பவுன் நகை கொள்ளை போலீஸ் போல் நடித்து கைவரிசை
Published on

குளச்சல்,

குமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி ரெத்தினம் (வயது72). இவர்களது மகளின் வீடு குளச்சல் மெயின் ரோட்டில் உள்ளது. நேற்று காலை ரெத்தினம் தனது மகளை பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு சென்றார். மகளை பார்த்துவிட்டு மீண்டும் தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அவர் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்த பகுதியில் சென்றபோது, ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் அவரை பின்தொடர்ந்து வந்தனர். ரெத்தினம் அருகே வந்ததும் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகே சென்று பேச்சு கொடுத்தனர்.

அப்போது, அவர்கள் தங்களை போலீஸ்காரர்கள் என்று அறிமுகம் செய்து கொண்டு, இந்த பகுதியில் திருடர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. நகைகளை அணிந்து கொண்டு தனியாக நடந்து செல்வது பாதுகாப்பாக இருக்காது. எனவே, நகைகளை கழற்றி கொடுங்கள். அவற்றை பத்திரமாக பொதிந்து தருகிறோம் என்று அவருக்கு அறிவுரை கூறினர்.

அவர்களின் பேச்சை நம்பிய ரெத்தினம் தான் அணிந்திருந்த தங்க சங்கிலி, 2 வளையல் என 6 பவுன் நகையை கழற்றி வாலிபர்களிடம் கொடுத்தார். அவர்கள் அதை ஒரு பேப்பரில் பொட்டலமாக சுற்றுவது போல் பாவனை காட்டினர். பின்னர், ஒரு பொட்டலத்தை ரெத்தினத்திடம் கொடுத்துவிட்டு, வீட்டில் சென்று இதை பிரித்து நகைகளை அணிந்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டனர்.

வீட்டிற்கு சென்ற ரெத்தினம் தனது கையில் இருந்த பேப்பர் பொட்டலத்தை பிரித்து பார்த்த போது, அதில் கற்களும், ஒரு தகர டப்பா மூடியும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தன்னிடம் நூதன முறையில் நகையை கொள்ளையடித்து சென்றதை உணர்ந்து வேதனையடைந்தார். இதுபற்றி குளச்சல் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் நகையை கொள்ளையடித்த 2 மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com