

பெரம்பலூர்,
தமிழகத்தில் 2018ம் ஆண்டு மார்ச் மாதம் பிளஸ்2 அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவமாணவிகளுக்கு தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டை போல, இந்த ஆண்டும் மாணவர்களின் மன உளைச்சலை தடுக்கும் பொருட்டு மதிப்பெண்கள் அடிப்படையில், மாணவமாணவிகளின் விவரம் வெளியிடப்படவில்லை.
அந்த வகையில், பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து நேற்று காலை முதலே பிளஸ்2 தேர்வு முடிவு குறித்த விவரம் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சரியாக காலை 9.30 மணியளவில் அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் மூலம் தேர்வு முடிவு வெளியானதும் பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் பிளஸ்2 தேர்வு முடிவு தகவல்கள் ஒட்டப்பட்டன.
பெரம்பலூர் மாவட்டத்தில், கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்2 பொதுத்தேர்வில் 4 ஆயிரத்து 370 மாணவர்களும், 4 ஆயிரத்து 495 மாணவிகளும் என மொத்தம் 8 ஆயிரத்து 865 பேர் தேர்வு எழுதினர். இதில் 4 ஆயிரத்து 063 மாணவர்களும், 4 ஆயிரத்து 279 மாணவிகளும் என மொத்தம் 8 ஆயிரத்து 342 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 94.10 சதவீதம் ஆகும்.
பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் கடந்த ஆண்டில் இருந்து புதிய முறை கொண்டு வரப்பட்டதால், அதன்படி இந்த ஆண்டும் மாணவமாணவிகள் அதிகம் பெற்ற மதிப்பெண்கள் விவரம் வெளியிடப்படவில்லை. மாணவமாணவிகளின் மதிப்பெண்கள் விவரம் அனைத்தும் அந்தந்த பள்ளிகளுக்கு இமெயில் மூலமாக அனுப்பப்பட்டதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதும் அந்தந்த பள்ளிகளில் தேர்வு பட்டியல் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டன. இதேபோல் மாணவமாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும் என பள்ளி கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதியவர்களுக்கு அவர்களது செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் தேர்வு முடிவு வந்தது.
இதில் அவர்களது பெயர், பாடவாரியாக அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், மொத்த மதிப்பெண்கள், தேர்ச்சி அல்லது தோல்வி என்ற விவரம் அனுப்பப்பட்டது. இதனால் மாணவமாணவிகள் தேர்வு முடிவுகளை தங்களது செல்போன் மூலம் அறிந்து கொண்டனர். இதனால் பலர் பள்ளிகளுக்கு நேரடியாக செல்லவில்லை. குறைந்த அளவிலான மாணவமாணவிகளை தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள பயின்ற பள்ளிகளுக்கு வந்ததை காண முடிந்தது. இதில் ஒரு சிலர் காலை 9.30 மணிக்கு முன்பாக பயின்ற பள்ளிகளுக்கு வந்து காத்து கொண்டிருந்தனர். பின்னர் அறிவிப்பு பலகைகளில் தேர்வு முடிவுகள் ஒட்டப்பட்டவுடன், அதனை அவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு மதிப்பெண்கள் என்ன? என்பதை குறித்து கொண்டனர். பலர் வீடுகள் அல்லது இருந்த இடத்திலேயே இருந்து தங்களது செல்போன்கள் மூலம் மின்னஞ்சல் முகவரியில் தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகிய விவரத்தை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொண்டனர்.