பழைய நடைமுறைபடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்க வேண்டும் - குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

பழைய நடைமுறைபடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
பழைய நடைமுறைபடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்க வேண்டும் - குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
Published on

திருப்பூர்,

கொரோனா ஊரடங்கு காரணமாக திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறாமல் இருந்தது. விவசாயிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் காணொலிக் காட்சி மூலமாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் விஜயகார்த்திகேயன் காணொலிக் காட்சி மூலமாக விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள வேளாண் விரிவாக்க மைய அலுவலகங்களில் அந்தந்தப் பகுதியில் உள்ள விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்துகொண்டனர். காணொலிக்காட்சி மூலமாக திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்த கலெக்டரிடம், விவசாயிகள் கோரிக்கைகளை தெரிவித்தனர். விவசாயிகளின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் மனோகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மகாதேவன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் தமிழக கட்சிசார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது-

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை காணொலி மூலம் நடத்தாமல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை நேரில் வைத்து விவசாயிகளின் குறைகளை தீர்க்க வேண்டும். குண்டடம் ஒன்றியம், தாராபுரம் ஒன்றியங்களில் அதிகப்படியான பட்டு வளர்ப்பு தொழில் நடைபெற்று வருகிறது. பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள் விவசாயிகளை விழிப்புணர்வு செய்து பட்டு வளர்ப்புக்கு மாற்றி வருகிறார்கள். தற்போது பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்காமல் பெரும் இழப்பை சந்தித்து வருகிறார்கள். கிலோ ரூ.600 என்று விற்பனை செய்து வந்த பட்டுக்கூடு தற்போது ரூ.250, ரூ.300 மட்டுமே கிடைக்கிறது. எனவே விவசாயிகளின் பட்டுக்கூடுகளுக்கு கிலோ ரூ.500 குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வட்டமலை கிராமத்தில் இயங்கி வரும் கார்பன் உற்பத்தி தொழிற்சாலையை தடை செய்ய வேண்டும். பொன்னாபுரம் குள்ளிப்பள்ளம் என்ற பகுதியில் சிலர் தேங்காய் தொட்டி எரிப்பில் ஈடுபடுகிறார்கள். இதனால் விவசாயிகள், கால்நடைகள் சுவாசிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே தேங்காய் தொட்டியை கரி எரிப்பதை நிறுத்தி உதவ வேண்டும். திருமூர்த்தி அணையிலிருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் செய்யும் பாலுக்கான பணம் அனைவரின் வங்கி கணக்கிற்கு ஆவின் மூலமாக நேரடியாக செலுத்தப்படுகிறது. தற்போது பால் பணம் வழங்க 15 நாட்களுக்கும் மேலாக காலதாமதம் செய்கிறார்கள். பணம் எடுக்க வங்கிகளுக்கு சென்று அலைய வேண்டியுள்ளது. இதனால் அன்றாட செலவுக்கு பணம் கிடைக்காமல், கால்நடைகளுக்கு தீவன பொருட்கள் வாங்க முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே பால் வழங்கும் விவசாயிகளுக்கு உடனடியாக அந்த சங்கங்களில் பால் பணம் பட்டுவாடா செய்யவும், அனைத்து சங்கங்களிலும் தானியங்கி பரிசோதனை கருவிகளை செயல்படுத்தி சீட்டு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலமாக பயிர்கடன், விவசாய நகை கடன், மத்திய கால கடன் மற்றும் விவசாயம் சம்பந்தமான இதர கடன்கள் சம்பந்தப்பட்ட சங்கங்களில் கடன் பெற்று வந்தார்கள். தற்போது நகரத்தில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலமாகவே கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. விவசாய கடன் பெறும் ஒருவர் தொடக்க வேளாண்மை சங்கத்திற்கும், மத்திய கூட்டுறவு வங்கிக்கும் 5 நாட்கள் செலவழித்து செல்ல வேண்டி உள்ளது. இதனால் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். எனவே புதிய நடைமுறையை கைவிட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலமாக வழங்கப்படும் வேளாண் பயிர் கடன் உள்ளிட்ட கடன்களை பழைய நடைமுறையை பின்பற்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com