புதுவையில் கத்தியால் வெட்டப்பட்ட பெயிண்டர் சாவு: கொலை வழக்காக மாற்றம் - 3 வாலிபர்கள் கைது

புதுவையில் கத்தியால் வெட்டியதிலும், தாக்கியதிலும் படுகாயமடைந்த பெயிண்டர் இறந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றி 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுவையில் கத்தியால் வெட்டப்பட்ட பெயிண்டர் சாவு: கொலை வழக்காக மாற்றம் - 3 வாலிபர்கள் கைது
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி சாரம் வேலன் நகரை சேர்ந்தவர் அஜித் (வயது30). கூலித்தொழிலாளி. இவருக்கும், பெரியார் நகரில் வசித்து வரும் உறவினரான விக்னேஷ் (22) என்பவருக்கும் குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 18-ந் தேதி அஜித் தனது நண்பரான சாரம் வேலன் நகரை சேர்ந்த பெயிண்டர் பிரவீன் (19) என்பவருடன் பெரியார் நகருக்கு சென்று விக்னேசுடன் தகராறில் ஈடுபட்டார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்து அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். ஆனாலும் ஆத்திரமடைந்த விக்னேஷ் (22), வேலு (23) மற்றும் அவரது நண்பரான பூமியான்பேட்டை ஆதித்யன் ஆகியோர் அன்று இரவு அஜித், பிரவீன் ஆகியோரை தேடி வந்தனர். அவர்கள் லட்சுமி நகர் பண்டரிதோப்பு பகுதியில் நண்பர்களுடன் மது குடித்துக் கொண்டிருப்பதை அறிந்து அங்கு சென்றனர். அவர்களை பார்த்ததும் அங்கிருந்து அஜித் தனது வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

அப்போது விக்னேஷ், வேலு, ஆதித்யன் ஆகிய 3 பேரும் சேர்ந்து பிரவீனை உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கி கத்தியால் வெட்டினர். இதில் அவர் தலை, உடல் என பல இடங்களில் வெட்டு காயமடைந்து அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனை தடுக்கச் சென்ற கணபதி என்பவரையும் தாக்கிவிட்டு அவர்கள் தப்பிச்சென்றனர்.

படுகாயமடைந்த பிரவீன், கணபதி ஆகிய இருவரும் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பிரவீன் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் அடிதடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பிரவீன் உயிரிழந்ததையடுத்து கொலை வழக்காக மாற்றி தொடர்ந்து போலீசார் விசாரித்தனர்.

இதைத்தொடர்ந்து விக்னேஷ், வேலு, ஆதித்யன் ஆகியோரை கோரிமேடு போலீசார் கைது செய்தனர். 3 பேரையும் கொரோனா பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவு வந்ததும் போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com