

திருக்கனூர்,
திருக்கனூரை அடுத்த கூனிச்சம்பட்டு-மணலிப்பட்டு இடையே சங்கராபரணி ஆறு உள்ளது. இந்த ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளி மாட்டு வண்டிகள் மூலம் கடத்தப்பட்டு வருகிறது. இந்த மணல் கடத்தலை தடுக்க திருக்கனூர் போலீசாரும், வருவாய் துறையினரும் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் அதனையும் மீறி இரவு நேரங்களில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சங்கராபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தலை முற்றிலும் தடுக்க புதுச்சேரி மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் உத்தரவின்பேரில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் நேற்று காலை கூனிச்சம்பட்டு - மணலிப்பட்டு இடையே உள்ள சங்கராபரணி ஆற்றில் மாட்டு வண்டிகள் செல்ல முடியாதபடி, பொக்லைன் எந்திரம் மூலம் ஆங்காங்கே பெரிய, பெரிய பள்ளங்களாக தோண்டி உள்ளனர்.
இதனையும் மீறி மாட்டு வண்டிகளில் மணல் கடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.