ஈரோட்டில் அடுத்தடுத்த 2 ஜவுளிக்கடைகளில் பணம் திருட்டு

ஈரோட்டில் அடுத்தடுத்த 2 ஜவுளிக்கடைகளில் பணம் திருட்டு போனது.
ஈரோட்டில் அடுத்தடுத்த 2 ஜவுளிக்கடைகளில் பணம் திருட்டு
Published on

ஈரோடு,

ஈரோடு பழையபாளையம் பெருந்துறை ரோட்டில் அடுத்தடுத்து 2 ஜவுளிக்கடைகள் உள்ளன. இந்த கடைகளின் ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு கடைகளை அடைத்துவிட்டு சென்றனர். நேற்று காலை வழக்கம்போல் அவர்கள் கடையை திறக்க வந்தனர். அப்போது கடைகளை திறந்துவிட்டு உள்ளே சென்று பார்த்தபோது கடைகளின் மேஜையில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பணம் வைத்த மேஜையை திறந்து பார்த்தனர். அப்போது 2 கடைகளிலும் ரூ.3 ஆயிரமும், ஒரு கணினியும் திருட்டு போனது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.


விசாரணையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் ஜவுளிக்கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் பணத்தையும், கணினியையும் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழையபாளையம் பஸ் நிலையம் அருகில் உள்ள அடுத்தடுத்த 3 கடைகளில் பணம், கணினி திருட்டு போனது. அங்கும் மேற்கூரையை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தார்கள். எனவே இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும், நேற்று நடந்த திருட்டு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com