தாமிரபரணி ஆற்றில் மணல் கடத்தலை தடுக்கக்கோரி கலெக்டரிடம் விவசாயிகள் மனு

கல்லிடைக்குறிச்சி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் மணல் கடத்தலை தடுக்கக்கோரி கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
தாமிரபரணி ஆற்றில் மணல் கடத்தலை தடுக்கக்கோரி கலெக்டரிடம் விவசாயிகள் மனு
Published on

நெல்லை,

நெல்லை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும். இந்த கூட்டத்தில் கலெக்டர் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்குவார்.

தற்போது கொரோனா தொற்று காரணமாக, இந்த மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறாமல் அங்கு வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் பொதுமக்கள் மனுக்களை போட்டுச் செல்கின்றனர். மேலும் கலெக்டர் ஷில்பா பொதுமக்களிடம் காணொலி காட்சி மூலம் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார். அவ்வாறு காணொலி காட்சி மூலம் கோரிக்கையை சொல்ல இயலாத பொதுமக்கள் அங்குள்ள புகார் பெட்டியில் மனுக்களை போடுகின்றனர்.

திசையன்விளை அருகே உள்ள குட்டம் தைக்கா பள்ளிவாசல் ஜமாஅத்தினர் காதர் முகைதீன், முகமதுசரிபு, முகமது முகைதீன், பீர்முகம்மது மற்றும் புரட்சி பாரதம் கட்சி மாவட்ட தலைவர் சேக்முகமது, செயலாளர் நெல்சன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட அமைப்பாளர் இரணியன் ஆகியோர் தலைமையில் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் மனுவை பெட்டியில் போட்டனர். அந்த மனுவில், திசையன்விளை அருகே உள்ள குட்டம் தைக்கா பள்ளிவாசலுக்கு சொந்தமான நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அந்த ஆக்கிரமிப்பை அகற்றி தரவேண்டும் என்று கூறியுள்ளனர்.

வள்ளியூரில் வசித்து வருகின்ற திருநங்கைகள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், வள்ளியூரில் வசித்து வரும் எங்களுக்கு வீட்டுமனை பட்டா, அடையாள அட்டை, ரேஷன் கார்டு வழங்க வேண்டும். மேலும் அரசின் நலத்திட்ட உதவிகளையும் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, எங்கள் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் மணல் கடத்தல் நடைபெறுகிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.

குடிநீர் பிரச்சினை

அகில பாரத இந்துமகா சபா மாவட்ட தலைவர் இசக்கிராஜா, துணைத்தலைவர்கள் ராமகிருஷ்ணன், கண்ணன் ஆகியோர் தலைமையில் பேட்டை சத்யா நகர், முத்துராமலிங்கம் நகர் பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலமாக எங்களுக்கு பிரதம மந்திரி நிதியில் இருந்து வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்த பணம் 4 தவணையாக தரப்படுகிறது. தற்போது வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. ஆனால் 34 குடும்பத்திற்கு ஒரு வருடம் தாண்டியும் இன்னும் பணம் வழங்கப்படவில்லை. இதனால் வீடு கட்டுகிறவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே உடனடியாக வீடு கட்டுவதற்கு பணம் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.

மேலப்பாளையம் கருங்குளம் பாகவதர் தெரு பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை சரிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

நெல்லை மாநகராட்சி 48-வது வார்டு பேட்டை தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பொதுமக்கள், தங்களுக்கு குடிநீர் வசதி, கழிவுநீர், ஓடை வசதி, பொதுக்கழிப்பிடம், நடைபாதை, மின்சார வசதி உள்ளிட்டவை செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com