தெள்ளூர் கிராமத்தில் ரேஷன் பொருட்கள் வழங்காததை கண்டித்து சாலை மறியல்

தெள்ளூர் கிராமத்தில் ரேஷன் பொருட்களை முறையாக வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தெள்ளூர் கிராமத்தில் ரேஷன் பொருட்கள் வழங்காததை கண்டித்து சாலை மறியல்
Published on

வந்தவாசி,

வந்தவாசி தாலுகா தெள்ளூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் நேற்று பொருட்களை வாங்க பொதுமக்கள் சென்றனர். அப்போது, விற்பனையாளர் அனைவருக்கும் வழங்கும் அளவிற்கு பொருட் கள் இருப்பு இல்லை. கடந்த மாதம் பொருட்கள் வாங்காமல் டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே தற்போது பொருட்கள் வழங்கப்படும் என்றார்.

இதனையடுத்து விற்பனையாளருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் விற்பனையாளர் ரேஷன் கடையை பூட்டிவிட்டு சென்றதாக தெரிகிறது.

அதைத் தொடர்ந்து பொதுமக்கள் வந்தவாசி - ஆரணி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ரேஷன் பொருட்கள் முறையாக வழங்காததை கண்டித்தும், கடையை பூட்டி விட்டு சென்ற விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கோஷமிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வந்தவாசி வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com