திருப்பத்தூர் மாவட்டத்தில் மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம், வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 12-ந் தேதி சிறப்பு முகாம்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்
Published on

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மூலம் பணி செய்யும் பெண்களுக்கு அரசு சார்பில் 125 சி.சி. திறன் கொண்ட இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 2019-20-ம் ஆண்டில் 1,773 பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் அதிகபட்சமாக 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.25 ஆயிரம் இதில் எது குறைவோ அது வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்சமாக ரூ.31 ஆயிரத்து 250 மானியமாக வழங்கப்படும்.

ஆதிதிராவிட பெண்களுக்கு 21 சதவீதமும், பழங்குடியினர் பெண்களுக்கு ஒரு சதவீதமும், மாற்றுத்திறனாளி பெண்களுக்கு 100 சதவீதமும், பிற பெண்களுக்கு 24 சதவீத வாகனங்கள் வழங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பணி செய்யும் கிராமப்புற பெண்கள் அவர்கள் கிராமத்திற்கு உட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில், நகர்ப்புறமாக இருந்தால் நகராட்சி அலுவலகங்களில், பேரூராட்சி அலுவலகங்களில் நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரடியாகவோ அல்லது பதிவு தபால் அல்லது விரைவு தபால் மூலம் வழங்கலாம். மேலும் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் குறித்த ஒரு நாள் சிறப்பு முகாம் வருகிற 12-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு முதல் 5 மணி வரை அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெறும். இதை பெண்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com