திருச்சியில் சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்: கல்லூரி மாணவர்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி செல்போன்கள் பறிப்பு

திருச்சியில் சினிமா பாணியில் கல்லூரி மாணவர்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி செல்போன்களை பறித்த 10 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருச்சியில் சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்: கல்லூரி மாணவர்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி செல்போன்கள் பறிப்பு
Published on

திருச்சி,

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் முகமதுஅபுபக்கர் (வயது 23). இவர் திருச்சி மன்னார்புரம் பகுதியில் வீடு எடுத்து தங்கியிருந்து திருச்சியில் ஒரு கல்லூரியில் எம்.எஸ்.சி படித்து வருகிறார். இவருடைய நண்பர்கள் கேரளாவை சேர்ந்த ஜமால்(23), பர்கான்(22), உஸ்மான்(23), ஷேக்(22). இவர்கள் 4 பேரும் அதே கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். இவர்கள் 5 பேரும் நேற்று முன்தினம் மாலை விமானநிலையம் அருகே உள்ள ஒரு மைதானத்தில் இறகுபந்து விளையாட காரில் சென்றனர்.

அங்கு விளையாடிவிட்டு இரவுக்கு மேல் காரில் திரும்பி கொண்டு இருந்தனர். பின்னர் சுப்பிரமணியபுரம் பகுதியில் ஒரு கடையில் காரை நிறுத்தி டீ சாப்பிட்டு மீண்டும் காரை எடுத்து கொண்டு புறப்பட்டனர். அப்போது இவர்களுடைய காரை பின்தொடர்ந்து 2 கார்கள் வந்தன. டி.வி.எஸ்.டோல்கேட் பழைய சுற்றுலாமாளிகை பகுதியை கடந்து சென்றபோது, மாணவர்களின் காரை முன்னும் பின்னுமாக 2 கார்கள் திடீரென வழிமறித்து நின்றன.

2 கார்களில் இருந்து இறங்கிய 10 பேர் மாணவர்களை வெளியே இழுத்து அவர்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டினர். பின்னர் 2 மாணவர்கள் வைத்து இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஐபோன், ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை பறித்து கொண்டனர். அப்போது மாணவர்களுக்கும், அந்த கும்பலுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதில் துப்பாக்கி தோட்டா ஒன்று கீழே விழுந்தது. இதையடுத்து அந்தகும்பல் மாணவர்கள் 5 பேரின் முகத்திலும் ஸ்பிரேவை அடித்துவிட்டு காரில் ஏறி அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். பின்னர் இது பற்றி கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று கண் எரிச்சலுடன் இருந்த மாணவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்தில் அவர்கள் விட்டு சென்ற துப்பாக்கி தோட்டாவை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீஸ் கமிஷனர் வரதராஜூ, துணை கமிஷனர் நிஷா ஆகியோர் நேற்று காலை கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் கல்லூரி மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

தொடர்ந்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்து, சம்பவம் நடந்த நேரத்தில் டி.வி.எஸ்.டோல்கேட் அருகே கல்லூரி மாணவர்களின் காரை பின்தொடர்ந்து சென்ற 2 கார்களின் வாகன பதிவு எண்ணை வைத்து விசாரித்து வருகிறார்கள். திருச்சியில் சினிமாபாணியில் கல்லூரி மாணவர்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி செல்போன்கள் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com