உளுந்தூர்பேட்டையில், மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த சர்க்கரை ஆலை ஊழியர் பலி

உளுந்தூர்பேட்டையில் மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த சர்க்கரை ஆலை ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
உளுந்தூர்பேட்டையில், மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த சர்க்கரை ஆலை ஊழியர் பலி
Published on

உளுந்தூர்பேட்டை,

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை சேர்ந்தவர் சகாயம் (வயது 55). இவர் பெண்ணாடம் அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சகாயம் மனைவி ரீட்டா மேரி(40). இவர்களுடைய மகன்கள் சரண்ராஜ், ஜாக்கிஜான்.

இவர்களில் சரண்ராஜிக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2-வது மகன் ஜாக்கிஜானுக்கு அடுத்த மாதம்(ஏப்ரல்) 29-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருமண வேலை தொடர்பாக சகாயம் நேற்று பெண்ணாடத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் சென்றார். பின்னர் அங்கு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பினார்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை ரெயில்வே மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது, சகாயம் திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி சுமார் 60 அடி பாலத்துக்கு கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த சகாயத்தின் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் சகாயத்தின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்த மாதம் தனது மகனுக்கு திருமணம் நடக்கவிருந்த நிலையில் விபத்தில் தந்தை இறந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com